வைஷ்ணவர்கள் மற்றும் த்வைதிகள் மஹாவிஷ்ணு பகவானின் அம்சமாக சாளக்கிராமத்தை பூஜை செய்கிறார்கள்.

சாளக்கிராமத்தில் மும்மூர்த்திகளும்
தேவாதி தேவர்களும் நித்யவாஸம் செய்கின்றனர்.

நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகிற மஹாவிஷ்ணுவின் அம்சம்தான் சாளக்கிராமம்.

சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான விஷ்ணுவின் அம்சமாக உள்ளது. 

நத்தைக் கூடு, சங்கு, நட்சத்திரம் என்று பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் இந்த சாளக்கிராம கல், புனிதமான கண்டகி நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது. 

திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியாக வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். 

அங்கு ரீங்கார வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். 

இப்படிப்பட்ட வடிவங்கள் தான் வணங்கிட உகந்தவையாகும்.

சாளக்கிராமத்தை ஆண்கள் யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம். 

இந்த சாளக்கிராம கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. 

பன்நெடுங்காலங்களாகவே சாளக்கிராமக் கற்களை கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிப்பட்டு வருகிறார்கள். 

பல்வேறு வடிவங்களில் சாளக்கிராம கற்களை கிடைப்பதைப் போலவே ஒவ்வொரு வடிவத்தைப் பொறுத்தும் சாளக்கிராமத்தின் வகைகளும் வேறுபடும். 

லஷ்மி நாராயண சாளக்கிராமம், லஷ்மி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம்… என்று 168 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

சாளக்கிராமம் வைத்து வழிபடுகின்ற வீட்டில் சகல சக்திகளும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. 

சாளக்கிராமத்தை ஒரு நாளில் இருமுறை வழிபட வேண்டும். 

சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது. 

அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக் கூடியது அல்ல. 

பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 

வலம்புரி சங்கை போல் மிகவும் அரிய பலன்களை தரக் கூடியது இந்த சாளக்கிராமம். 

ஆனால், பூஜை அறையில் வைத்து வழிபடுவதாக இருந்தால், தினமும் நிச்சயமாக ஸ்நானம் முடித்து, தூய்மையான கங்கை காவிரி நீர் பட்சத்தில் கிணற்று நீரினால் சாளக்கிராமத்தை அபிஷேகம் செய்ய வேண்டும். 

உங்களால் அபிஷேகம் செய்ய முடியாத நாட்களில், உங்கள் குழந்தைகளை அபிஷேகம் செய்ய பழக்கப்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் வம்சத்துக்கே நல்ல பலன்கள் கிடைக்கும். 

சாளக்கிராம பூஜை

சாளக்கிராம பூஜை செய்பவன் உள்ளம் தூய்மையாகும். 

சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல பூஜை செய்பவர்களின் பாவங்கள் கழன்று ஓடும். 

சாளக்கிராமத்தை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு. 

சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எம பயம் ஏற்படாது. 

பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி விஷ்ணு மற்றும் சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்ப காலம் பூஜை செய்த பலன்கள் ஒரே நாளில் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

சாளக்கிராமத்தின் சிறப்பு

சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

வழிபடப் பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. 

சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. 

சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரெண்டு கூறுகளாக கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். 

சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. 

இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந் நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். 

சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.

சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். 

ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். 

நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். 

இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். 

வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். 

விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். 

மிகபெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். 

விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பாறத் துணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். 

பதினான்கு சக்கரங்களை கொண்டது ஆதிசேஷ சாளக்கிராமம். 

சக்கரகாரமாக இரண்டு சக்கரங்களை கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

ஒரே சக்கரத்தை கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். 

மறை பட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். 

இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். 

இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். 

துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக இருப்பது வாசுதேவ சாளக்கிராமம். 

சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிரத்யும்ன சாளக்கிராமம். 

விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.

இவ்வாறு சாளக்கிராமம் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். 

சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். 

இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்து போனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். 

சாளக்கிராமம் இருக்குமிடத்தில் மும்மூர்த்திகளும் சகல சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். 

சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். 

12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 

12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் சொத்தாக கருதவர். 

சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கிறது.

சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. 

வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் – செல்வத்தையும், சுகத்தையும் தரும்

பச்சை – பலம், வலிமையைத் தரும்

கருப்பு – புகழ், பெருமை சேரும்

முக்கியமான விஷயம்

கடைகளில் சாளக்கிராமத்தை வாங்கி வேதவிற்பண்ணர்களிடம் கொடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து பின்னர் அவரிடமிருந்து நல்ல நாளில் வாங்க வேண்டும். 

சாளக்கிராமத்திற்கு எளிய முறையில் வெறும் தண்ணீர் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு துளசி இலை தூப தீபம் காட்டி நிவேதனம் செய்து அர்ச்சித்தாலும் ஸ்ரீஹரி ப்ரீத்தி அடைவார்.

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும் சாளக்கிராம பூஜை.

பூஜை ஒரு வருடம் இடைவிடாது செய்தால் ஒரு தெய்வீக சக்தி உங்கள் வீட்டில் இருப்பதாக உணர்வீர்கள்.

எந்த நோயும் அண்டாது.

சாளக்கிராம பூஜை செய்பவர்களை ஸ்ரீஹரியின் சுதர்சன சக்கரம் உங்களை எப்போதும் காக்கும்.

வாழ்நாள் முழுவதும் நித்ய பூஜை செய்பவர்கள் இறந்த பிறகு வைகுண்டத்தில் நாராயணன் மற்றும் மஹாலட்சுமியால் ராஜ மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள்.

ஆனால் நித்ய பூஜையை நிறுத்தக் கூடாது. உங்களால் பூஜை செய்ய இயலாத பட்சத்தில் வேறு ஒருவரை பூஜை செய்ய அனுமதிக்கலாம்.

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹீ
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.