பகவான் பிறந்த உயிரினங்களுக்குத்தான் அருள்புரிவானா என்றால் அது தானில்லை. தாயின் கர்பத்திலுள்ள கருவையும் காப்பாற்றியிருக்கிறானே.
ஆம், பாரதப்போர் முடிந்து, பாண்டவர்களும் ஆட்சி ஏற்றார்கள். கண்ணன் தன் வேலை இனிதே முடிந்தது என்று த்வாரகைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது தலைவிரிகோலமாய் ஒரு பெண்மணி, “தேவாதி தேவனே, ஜகந்நாதா! நெருப்பைக்கக்கிக்கொண்டு ஒரு பாணம் என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. அது என் உயிரை மாய்த்தாலும் பரவாயில்லை. என் வயிற்றில் உருவான கருவை அழித்துவிடாமல் காப்பாற்று“ என்று கதறிக்கொண்டே ஒடி வந்தாள்.
கண்ணனுக்குத் தெரிந்துவிட்டது, வந்த பெண்மணி உத்திரை, அபிமன்யுவின் மனைவி என்று. மேலும் அவருக்குப் புரிந்துவிட்டது இது அஸ்வத்தாமனின் வேலைதானென்று.
பாண்டவர்களின் சந்ததியே இல்லாமல் செய்துவிட வேண்டுமென்று அவன் “அபாண்டவீயம்“ என்ற மிகக் கொடிய அஸ்திரத்தை கருவை அழிக்கும் பொருட்டு ஏவி விட்டிருந்தான். கண்ணன் உடனே சோதிவடிவமாக அவள் கர்பத்துள் நுழைந்து, தன் சுதர்சன சக்ரத்தால் அந்த அஸ்திரத்தை அழித்தான்.
குழந்தை பிறந்ததும், அது விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட குழந்தை என்ற காரணத்தால் அதற்கு “விஷ்ணுராதன்“ என்று பெயர் சூட்டினர். பிறந்த குழந்தை, தன் தாயின் கருவில் இருந்த போது கண்ட எம்பெருமானின் உருவம் மீண்டும் கண்ணில் படுகிறதா என சுற்றும், முற்றும் பரீக்ஷித்துப் பார்த்ததால் அவனுக்கு “பரீக்ஷித்“ என்ற பெயரும் ஏற்பட்டது.
இது மட்டும் அல்ல, பகவான் உயிருள்ள உயிர்களை மட்டுமல்ல, உயிரற்ற பொருள்களுக்கும் கருணை புரிகிறார் என்பதற்குச் சான்று...
ஒருசமயம் கண்ணன் வெண்ணையைத் திருட, யசோதா அவனைத் துரத்தி வந்தாள். கண்ணன் தயிர்பானைகள் இருக்கும் ஒரு ததிபாண்டன் வீட்டில் பெரிய பானைக்குள் ஒளிந்தான். அவனை அந்த ததிபாண்டன் பார்த்ததும், கண்ணன் "தயவுசெய்து யசோதாவிடம் என்னை காட்டிவிடாதே" எனக் கேட்டான்.
யசோதா வந்தபோது ததிபாண்டன் பொய் சொன்னான். பின்னர் கண்ணன் அவனிடம், "நீ என்னைக் காப்பாற்றியதற்காக, என்ன வேண்டும் கேட்டுக்கொள்" என்றார். அவன்: "எனக்கு மோக்ஷம் வேண்டும், அதுமட்டுமல்ல, அந்த பானைக்கும் மோக்ஷம் அருள வேண்டும்" என்றான்.
அதற்காக கண்ணன் அதனை அங்கீகரித்தார். ஏனென்றால், உண்மையான ஆச்சார்யர்கள் தங்களை மட்டுமல்ல, தம் சேதன அசேதனங்களையும் சரணாகதி பெற்று கொடுக்கக்கூடியவர்கள்.
இப்போது புரிகிறதா? எம்பெருமானின் கருணை அளவிட முடியாதது. காரணம், அவனே அநந்தன் அல்லவா!
நீங்களே சொல்லுங்கள் – ஸ்ரீமன் நாராயணன் ஆத்மாக்களில் வேறுபாடு பார்ப்பவனா? இல்லையே.
ஆக, நாம்தான் அவனை விட்டு விலகுகிறோம். பிறகு அவன் நமக்கு கருணை புரிவதில்லை என்று புலம்புகிறோம். பாவங்கள் காரணமாகவே அவன் அருள் தடைப்படும். ஆனால், த்ரௌபதி, கஜேந்திரன் போன்றவர்கள் போல, அவன் திருப்பாதங்களில் முழு சரணாகதி செய்தால், நம்மை காக்க வல்லவனே அவன்.
ஒருவேளை நாம் அறியாமல் ஏதாவது பாவங்களை செய்திருந்தாலும், அவன் சிறு தண்டனைகளால் தீர்த்து, இறுதியில் தம்மிடம் சேர்த்துக் கொள்வான் – இது உறுதி!