ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை பத்துவிதமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
அவை :

1, அத்வேஷி. 
2, அனுகூலன்
3, நாமதாரி
4, சக்ராங்கி
5, மந்திரபாடி
6, வைஷ்ணவன்
7, ஸ்ரீ வைஷ்ணவன்
8, ப்ரபந்நன்
9, ஏகாந்தி
10, பரம ஏகாந்தி
இவற்றை விளக்கமாக பார்ப்போம்

1, அத்வேஷி 
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும் துவேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி

2, அனுகூலன் 
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்துகொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது , இவை எல்லாவற்றையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.

3, நாமதாரி 
முன்சொன்ன குணங்களோடு மஹாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்திருப்பவன்.

4, சக்ராங்கி 
மேலே சொன்ன மூன்றோடு , வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆச்சார்யன் மூலமாகத் தன் தோள்களில் தரித்து, திருமண் காப்பு தரித்து இருப்பவன்.

5, மந்திரபாடி 
முன் சொன்ன நான்கோடு,  சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கவல்ல, பகவத் மந்திரமான திருஎட்டெழுத்து மந்திரத்தை ஆச்சார்யன் மூலமாக உபதேசம் பெற்று, ஜபித்து காரியசித்தி பெறுபவன்.

6, வைஷ்ணவன் 
மேலே சொன்ன ஐந்தையும் மேற்கொண்டு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளான கர்ம ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைபிடிப்பவன்.

7, ஸ்ரீவைஷ்ணவன் 
முன் சொன்ன ஆறையும் கடைப்பிடித்து, ஒழுகுகின்ற எண்ணையானது  பிசிறு இல்லாமல்  ஒழுகுவது போல, சிந்தனையானது வேறு நினைவு இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டும் மனதில் நிறுத்தி , அவனை  மனதில் நிலைநிறுத்தி தியானிப்பவன்.

8, ப்ரபந்நன் 
மேலே சொன்ன ஏழு தகுதிகளோடு, பகவானை அடைவதற்கு பிரபத்தி நெறியாகிய சரணாகதியே தகுந்தது என்று பிரபத்தியை கடைபிடிப்பவன். வேதசாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கர்ம ஞான பக்தி யோகங்களை கடைபிடிப்பது கடினமானது, அப்படியே கடைபிடித்தாலும் பகவானை அடைய பலபிறவிகள் எடுக்கவேண்டி வரும். ஆகையால் சரணாகதியின் மூலமாகவே பகவானை அடையப் பாடுபடுபவன்.

9, ஏகாந்தி 
முன்சொன்ன எட்டு தகுதிகளோடு, எம்பெருமானை அடைய தான் மேற்கொள்ளும் சரணாகதியும் ஏற்றதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாகப் பற்றிக்கொள்ளுபவன்.

10, பரம ஏகாந்தி 
மேற்சொன்ன ஒன்பது தகுதிகளோடு பகவானை அடைய சரணாகதி மேற்கொள்ளுவதும், பகவானை உபாயமாக பற்றிக்கொள்ளுவதும் கூட கடினமானதுதான். ஆகவே நமக்கு நல்லவழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சார்யனை சரணமடைந்து , அவர் மூலமாக எம்பெருமானை அடையலாம் என்று முடிவு எடுப்பவன்.

மேலே சொன்ன பத்துவிதமான வைஷ்ணவத் தகுதிகளில், முதல் ஆறு தகுதிகளை ஆச்சார்யனிடம் பஞ்சசம்ஸ்காரம் பெறுவதின் மூலமாக அடைந்து விடலாம்,  ஆச்சார்யனிடம் சங்க சக்கர முத்திரைகளை பெறுவதன் மூலமாக சக்ராங்கி ஆகலாம்,  தாஸ்யநாமம் பெறும்போது நாமதாரி ஆகலாம் . 

ரகஸ்யத்ரயம் பெறும்போது மந்திரபாடி ஆகலாம். மீதமுள்ள நான்கையும் நாம் முயற்சி செய்து அடைந்துவிடலாம், மேலோட்டமாக பார்த்தால் சுலபமாகத் தோன்றும். ஆனால் உண்மையாக கடைப்பிடிப்பதுதான் முக்கியம்.

ஆகவே நண்பர்களே! 
இதுவரை பஞ்சசம்ஸ்காரம் பெறாதவர்கள் நல்ல முமுக்ஷுவாக இருக்கும் ஆச்சார்யனை சரணம் அடைந்து பஞ்சசம்ஸ்காரம் உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள் பிறகு பார்ப்போம் என்று தள்ளிப்போடாதீர்கள், 
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்.

இனி வரப்போகும் கலிகாலம் கொடுமையாக இருக்கும். ஆகவே எம்பெருமானார் சம்பந்தமுள்ள நல்லதொரு ஆச்சார்யனிடம் உடனே சரணம் அடைந்து பரமபதத்திற்கு செல்லும் வழியைப்பாருங்கள். முதலில் பிரமச்சாரியத்தில் தவறவிட்ட சாஸ்திரங்களை வர்ணஸ்ரமத்தில் பிடிப்பது வயோதிகம், ஞாபககுறைவு, உச்சரிப்பு தவறு போன்றவற்றால் கடினம்.நாம ஸ்மரணமும் சரணாகதியே முக்திக்கு வழி.