கடவுள் உங்கள் ஊருக்கு வரப்போகிறார். இந்த அசரீரி ஒலியைக்கேட்டதும், மக்கள் அனைவரும் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினார்கள். அனைவரும் வழிமேல் விழிவைத்து கடவுளுக்காகக் காத்திருந்தனர். ஒரே ஒரு வேலைக்காரச் சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், “தானுண்டு தன் வேலை உண்டு” என வீட்டு வேலையை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள்.
கொஞ்சநேரத்தில் காற்றைப் போல், கதிரொளியைப் போல், முதியவர் ஒருவர் உதித்தார் ஊருக்குள்! வெறிச்சோடிக் கிடந்த வீதிகளில் வலம் வந்தார். ஆளரவமற்ற வீடுகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மெல்ல நடந்தார். ஒரே ஒரு வீட்டுக்குள்ளிலிருந்து மட்டும் பாத்திரம் உருட்டும் சத்தம் வந்தது.
உள்ளே நுழைந்தார் முதியவர். கடமை உணர்ச்சியுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரச் சிறுமி. சின்னப் பெண்ணை வாஞ்சையோடு அருகே அழைத்தார் முதியவர். அளவான ஆசையையும், அளவற்ற ஆசியையும் கொடுத்தார்.
ஊரார் வந்ததும், “நான் என் கடமையைச் செய்து கொண்டிருந்ததால், கடவுள் எனக்கு தரிசனம் தந்தார்” எனக் கூறினாள் அந்தச் சிறுமி.
யார் தங்கள் கடமையை உண்மையுடன் செய்கிறார்களோ, அவர்களுக்கு கடவுள் தரிசனம் தருவார்.