Sri Mahavishnu Info: விஷ்ணு புராணம் – பகுதி 117 | Vishnu Purana Ep 117 விஷ்ணு புராணம் – பகுதி 117 | Vishnu Purana Ep 117
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

விஷ்ணு புராணம் – பகுதி 117 | Vishnu Purana Ep 117

Sri Mahavishnu Info
விஷ்ணு புராணம் – பகுதி 117 | Vishnu Purana Ep 117

05_37. க்ருஷ்ணர் பரமபதமேகுவது

இப்படியாக பலராம, க்ருஷ்ணர்கள் தீயவர்களைக் கொன்று ஒருவாறு பூபாரத்தைக் குறைத்தனர்.  பாரத யுத்தத்திற்குப் பின் ஒரு ஸமயம் யாதவர்கள் பிண்டாரகம் எனும் தீர்த்த க்ஷேத்ரத்திலிருந்த போது அங்கு வந்த விச்வாமித்ரர், நாரதர் முதலான தேவ ருஷிகளைக் கண்டனர்.  விதி வஸத்தால் அறிவிழிந்த அவர்கள் க்ருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த ஸாம்பனுக்கு கர்ப்பவதி போன்று வேஷமிட்டு அவர்களிடம் விளையாட்டாக அழைத்துச் சென்று இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்டனர்.  திவ்ய ஞானிகளான அவர்கள் இவனுக்கு ஒரு இரும்பு உலக்கை பிறக்கும். அதனால் யாதவ வம்சமே அழிந்து போகும் என்று சபித்து விட்டனர்.  அதுவும் நடந்தது.  உக்ரஸேனரின் ஆணையால் அந்த இரும்புலக்கையை பொடி செய்து கடலில் கறைத்து விட்டனர் யாதவர்.  அது ஆங்காங்கே கோரைப் புற்களாக முளைத்து காலத்திற்காகக் காத்துக் கிடந்தது.


கடலில் கறைத்த பொடிகளில் ஒரு துகள் மீனவர் கையிலகப்பட்ட மீனின் வயிற்றில் இருந்தது.  அதை ஜரை என்ற வேடன் எடுத்து தன் அம்பின் நுனியில் பொருத்திக் கொண்டான்.


அந்த ஸமயத்தில் தேவதூதனாக வாயுதேவன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வந்தான்.  க்ருஷ்ணர் பூபாரத்திற்காக அவதரித்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதையும், அஸுரர்கள் அழிக்கப்பட்டதையும் கூறி மீண்டும் விண்ணுலகிற்கு வருவதைப் பற்றிய க்ருஷ்ணனின் அபிப்ராயத்தை ப்ரார்த்தித்தான்.  அப்போது க்ருஷ்ணன், "இந்த யாதவர்களில் ஒவ்வொருவனும் ஜராஸந்தனுக்கு ஈடானவனே.  இவர்கள் இருக்கும் வரை பூபாரம் குறைந்ததாக ஆகாது.  இவர்கள் அழிவையும் இப்போதுதான் துவக்கி இருக்கிறேன்.  இன்னும் ஏழு இரவுகளுக்குள் அனைத்தையும் முடித்து விட்டு, ஸமுத்ரத்தினிடமிருந்து முன்பு பெற்ற த்வாரகையையும் மீண்டும் அதனிடமே விட்டு விட்டு, என் மனுஷ்ய உடலையும் அழித்துக் கொண்டு ஸங்கர்ஷணனுடன் வந்து சேர்கிறேன் என்று தேவேந்த்ரனிடம் கூறு" என்று பதில் கூறி அனுப்பினான்.


அதன் பின்னர் த்வாரகையில் பல துர்நிமித்தங்கள் தோன்றின.  இவையாவும் யாதவ குல அழிவையே காட்டுவன என்று கூறி க்ருஷ்ணனும் யாதவர்களை த்வாரகையை விட்டு, ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் புறப்படுமாறு ஏகினான்.  இவைகளை அறிந்ததும் பரம பாகவதரான உத்தவர் என்ற யாதவர் க்ருஷ்ணனை அணுகி, "க்ருஷ்ணா, இவையாவும் உன்னிஷ்டப்படியே, கட்டளைப்படியே நடக்கின்றன.  இந்த நிலையில் நான் செய்ய வேண்டுவதை எனக்கு அனுக்ரஹித்தருள வேண்டும்" என்று பக்தி மேலிட கேட்டுக் கொண்டார்.  க்ருஷ்ணர் தான் த்வாரகையை விட்டு அகன்றதும் த்வாரகை கடலில் மூழ்கப் போவதையும், வரப்போகும் யாதவகுல அழிவையும், தானும் வைகுண்டம் செல்லப்போவதையும் அவரிடம் கூறி அவருக்குப் பல தத்வங்களையும், தன் பாத ரக்ஷைகளையும் அருளிச் செய்தார்.  அவருக்கு தேவ மார்க்கமாக செல்லும் ஆசியையும் அளித்து, கந்தமாதன பர்வதத்திலிருக்கும் பதரிகாச்ரமம் சென்று தன்னையே த்யானிக்குமாறு விடையளித்தார்.  அதன்படியே அவரும் மோக்ஷமடைந்தார்.


அதன் பின்னர் ப்ரபாஸ தீர்த்தத்தில் மது மயக்கத்தில் வீழ்ந்த யாதவர்கள் தன்னிலை அறியாது தம் ப்ரபாவங்களையும், மற்றவர் குறைகளையும் பெரிதாகப் பேசிடப் பெரும் கலகமேற்பட்டது.  ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முற்பட்டனர்.  அவர்கள் ஆயுதங்கள் அழிந்து அங்கு முளைத்திருந்த கோரைப் புற்கற்றைகளைப் பறித்து அதனால் தாக்கிக் கொண்டனர்.  விதிப்படியே அவையாவும் இருப்புலக்கைப் போன்று மாறின.  இதை விலக்க வந்த க்ருஷ்ணனுக்கும் அடி விழுந்தது.  இதனால் பெரும் கோபம் கொண்ட க்ருஷ்ணன் தானும் அதே கோரைகளைப் பிடுங்கி அவர்களனைவரையும் அழிக்கலாயினான்.  இதன் முடிவில் க்ருஷ்ணன் புதல்வர்கள் உட்பட யாதவ குலமே இறந்தொழிந்தது.  பலராமர், க்ருஷ்ணன், க்ருஷ்ண ஸாரதியான தாருகன் ஆகியோரே பிழைத்திருந்தனர்.


தாருகன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே க்ருஷ்ணனின் தேரும் குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் சென்று மறைந்தது.  க்ருஷ்ணனின் சங்கம், சக்ரம், சார்ங்கம், கட்கம் இவைகளும் அவனை ப்ரதக்ஷிணம் செய்து ஸூர்ய மார்க்கத்தில் மறைந்தன.  ஒரு மரத்தடியில் யோகாஸனத்திலிருந்த பலராமரின் முகத்திலிருந்தும் மஹா ஸர்ப்பமொன்று கிளம்பி ஸித்தர்களும், நாகர்களும் துதிக்க ஸமுத்ரராஜனின் அழைப்பையேற்று அதில் சென்று மறைந்தது.


பலராமர் பிரிந்ததும் க்ருஷ்ணர் தாருகனை அழைத்து அவனை உடனே த்வாரகைக்குச் சென்று நடந்தவைகளை வஸுதேவர், உக்ரஸேனர் முதலானோருக்குக் கூறி, தானும் யோக நிஷ்டையால் உடலை விடப்போவதையும் கூறச் சொன்னார்.  விரைவில் த்வாரகை அழியப் போவதால் வஜ்ரனை அரசனாகச் செய்து கொண்டு அர்ஜுனன் வந்து அழைத்துச் செல்லும் போது அவனுடன் அனைவரையும் செல்லுமாறுக் கூறினார்.  தாருகனையே ஹஸ்தினாபுரம் சென்று பாண்டவர்களிடமும் அனைத்தையும் கூறி அர்ஜுனனால் முடிந்த அளவு, யாதவர்களனைவரையும் அழைத்து வந்து காக்குமாறுக் கூறச் சொன்னார்.  தாருகனும் வேறு வழியின்றி க்ருஷ்ணனைப் பலமுறை ப்ரதக்ஷிணம் செய்து அவன் கூறியபடியே சென்று அவைகளைச் செய்து முடித்தான்.


முன்பொரு ஸமயம் துர்வாஸர் க்ருஷ்ண க்ருஹத்திற்கு அதிதியாக வந்து தங்கியிருந்தார்.  க்ருஷ்ணனும், ருக்மிணியும் அந்த ப்ராஹ்மணரைப் பெரிதும் உபஸரித்தனர்.  அவர்களை அனுக்ரஹிக்க நினைத்த துர்வாஸர் அவர்களைப் பரிக்ஷிக்கலானார்.  இஷ்டப்படி வருவார், வருவேனென்று கூறி வர மாட்டார்.  க்ருஷ்ணனின் படுக்கையில் படுத்துக் கொள்வார்.  எதையாவது எரித்து விடுவார். பலமாக சாப்பிடுவார். ஒரு நாள் சாப்பிடவே மாட்டார்.  அப்படி ஒரு முறை தனக்கு பாயஸம் கொண்டு வரச் சொன்னார்.  அவர் உண்டு மிகுந்த பாயஸத்தை க்ருஷ்ணனையும், ருக்மிணியையும் உடலில் பூசிக் கொள்ளச் சொன்னார்.  அவர்களும் அவ்வண்ணமே செய்தனர்.  அதன் பின் தேரிலேறிக் கொண்ட அவர் பாயஸம் பூசிக் கொண்ட உடலோடு ருக்மிணியை அந்தத் தேரை இழுத்துச் செல்லக் கட்டளையிட்டார்.  அவளை அதன் பின் குச்சியால் குத்தியும், அடித்தும் வேகமாகச் செல்லச் சொன்னார். ஓரளவில் அவள் கீழே விழுந்து விட்டாள்.  தேரிலிருந்து இறங்கி ஓடிச் சென்ற அவரை அப்போதும் க்ருஷ்ணர் சென்று மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்.  பெரிதும் மகிழ்ந்த துர்வாஸர், அவர்களிருவரையும் அன்போடும், கருணையோடும் அனுக்ரஹித்தார்.  ருக்மிணிக்குப் பெரும் கீர்த்தியையும், முதுமையில்லாமை, உடல் மாறுபாடில்லாமைகளை அருளிச் செய்தார்.  பின்னர் க்ருஷ்ணனிடம், "க்ருஷ்ணா! நீ இயற்கையிலேயே கோபத்தை வென்று விட்டாய்.  பல கொடுமைகளை நான் செய்த போதும் என்னை மீண்டும், மீண்டும் உபஸரித்து, சந்தோஷிக்கவே செய்தாய்.  நீ வேண்டும் வரங்களைத் தருகிறேன், எவரும் உன்னை விரும்புவர்.  மூவுலகிலும் நீ இன்புறுவாய்.  இந்த பாயஸத்தைப் பூசிக் கொண்ட எந்த பாகங்களிலும் உனக்கு மரண பயமில்லை.  ஆனால் அதைப் பூசிக்கொள்ளாத உன் பாதங்களே உன்னுடைய மர்ம ஸ்தானம்" என்று கூறியிருந்தார்.


அதை இப்போது நிறைவேற்றும் வண்ணம் க்ருஷ்ணன் கால் மீது கால் போட்டு, யோக நித்ரையிலாழ்ந்தான்.  அங்கு வந்த ஜரனும் ஏதோ விலங்கு என்று நினைத்துத் தொலைவிலிருந்தே அந்தத் துகள் பொருத்திய அம்பை விட்டான்.  விஷம் தோய்ந்த அம்பு க்ருஷ்ணனின் காலைப் பதம் பார்த்தது.  அருகில் வந்த வேடனும் நடந்ததை அறிந்து பதறினான்.  க்ருஷ்ணன் அவனையும் தேற்றி, சதுர்புஜங்களோடு தரிசனம் தந்து, உடனை ஒரு விமானத்தை வரவழைத்து அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் அளித்தான்.  தன் அவதார கார்யம் முடிந்து உடலையும் நீத்தான்.

📚 ஆன்மிக PDF தொகுப்பு

🙏 “தெய்வத்தின் குரல்” முழு தொகுப்பு, காஞ்சி மகாபெரியவா அருள்மொழிகள், ஆன்மிக சிந்தனைகள் (14 PDF புத்தகங்கள்) மற்றும் அரிய PDF நூல்கள். (போனஸ் 10 PDF)

📥 Instant Download
♾️ Lifetime Access
🎁 Bonus PDF Included
💰 சிறப்பு சலுகை
₹199
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚