Sri Mahavishnu Info: Thiruppavai pasuram 7 | திருப்பாவை பாடல் 7 Thiruppavai pasuram 7 | திருப்பாவை பாடல் 7
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Thiruppavai pasuram 7 | திருப்பாவை பாடல் 7

Sri Mahavishnu Info


கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே*
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து* வாச நறுங் குழல் ஆய்ச்சியர்* மத்தினால்-
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ* நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ* தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை (7)

சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆண்டாள் இந்த பாடல் முழுவதுமே பலவிதமான ஒசைகளைப் பற்றி சொல்கிறாள் – பறவைகள் கத்து கின்றன, ஆய்ச்சியரின் தாலி மணி மாலைகள் முதலானவை எழுப்பும் ஓசை, அவர்கள் தயிர் கடையும் ஓசை என்று பலவிதமான ஒசைகளுடன் இவர்கள் கேசவனை பாடும் ஓசையும் சேர்ந்து ஒலிக்கிறது.

ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம் துணையுடன் பறந்து ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம்.

ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே… தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர் கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைகிறார்களாம்.

அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது. இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும்.

நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? பகவதனுபவத்தை உணர்ந்து அதனால் முகத்தில் ப்ரஹ்ம தேஜசை பெற்றவளே! ஹே தேஜஸ்வினி! கதவை திறந்து வந்து எங்களோடு இணைந்து கொள்! என்று அழைக்கிறார்கள்!

இப்பாடலில் உயர்ந்த க்ருஷ்ணானுபவம் இழையோடுகிறது. இங்கே எழுப்புகிறவர்கள் நினைப்பது ஒன்றாக நடந்தது வேறொன்றாக ஆயிற்று. இவர்கள் க்ருஷ்ணனை பாடினால் எழுந்திருப்பாள் என்று பார்த்தால், அவளோ அதை கேட்டுக்கொண்டே படுத்துக்கொண்டிருக்கிறாள்! கேசவன் என்று மார்கழி மாதத்துக்கான மூர்த்தியை சொல்லி, நம்மை துன்புறுத்திய கேசி போன்ற அசுரர்களை அழித்த கேசவனை பாட நீ வரவில்லையா என்று சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆனை சாத்தன் என்பதற்கு அற்புதமாக பெரியவர்கள் அர்த்தங்கள் சொல்வர். சாத்துதல் அல்லது சாற்றுதல் எனும்போது அழித்தல் அல்லது காத்தல் என்று இரண்டுமே பொருந்தும். பகவான் ஆனைச்சாத்தனாக இருக்கிறான். ஒரு யானை கஜேந்திரனை பகவான் ரக்ஷித்தான். இன்னொரு யானை குவலயாபீடத்தை கொன்றான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனல்லவா அவன் !

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚