ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும். அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார் என்றால், இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை, பாரம் குறைந்து விட்டது. இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள். எப்படி? சரியான உபதேசத்தின் மூலம். இறை அருளை உணர்த்துவதின் மூலம்.
சீடன் ஒருவன், "எல்லாம் விதிப்படி தான் நடக்கும் எனும்போது, நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?" என்று குருவிடம் வாதாடினான். அவர் அவனிடம், "கடும் வெயிலில் நீ வெளியில் செல்லும்போது எப்படிச் செல்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு சீடன், "குருவே! கடும் வெயிலில் செல்லும்போது, குடை பிடித்துக் கொண்டு, கால்களில் காலணி அணிந்து கொண்டு, கையில் கொஞ்சம் தண்ணீரும் எடுத்துக் கொண்டு, மரநிழலில் சற்று இளைப்பாறியபடிதான் செல்வேன்"என்றான்.
குரு பதிலளித்தார், "வெயில் காயும் போது குடை, காலணி, மரநிழல், தண்ணீர் இவை உன்னை சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து எப்படி காக்கின்றனவோ, அதேப் போல, இறைவனிடம் நீ விடாது பிரார்த்தனை செய்து கொண்டே வந்தால், அது உன்னை விதி என்னும் கொடிய வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள உதவும். இறைவழிபாடு, கடும் வெயிலில் குளிர்தரும் நிழலாகும்" என்று சொல்ல, சீடனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான்.
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள். வினை கழிந்த மகான்களை வணங்க, போற்றி துதிக்க, நமது பாவ வினை ஏற்றுக் கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை.