மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 7
நண்பர்களும் உறவினர்களும் சத்தியவதியுடன் சேர்ந்து கொண்டு பீஷ்மரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறும் அரச பதவியை ஏற்குமாறும் வலியுறுத்தினர். தேவவிரதனாகிய பீஷ்மர் முன்பு சிம்மாசன பதவியையும் இவ்வாழ்க்கை இன்பத்தையும் துறந்ததினால் சத்யவதி சந்தனு மன்னனை மணந்தாள். அன்றைய சூழ்நிலை அப்படி இருந்தது. இன்று சூழ்நிலை அறவே மாறிப் போயிருந்தது. எந்த சத்தியவதியின் பொருட்டு தேவவிரதன் அரச பதவியையும் இவ்வுலக இன்பத்தையும் ஒதுக்கித் தள்ளினாரோ இன்று அதே சத்தியவதி தங்கள் குடும்ப நலனை முன்னிட்டு தேவவிரதனாகிய பீஷ்மர் சிம்மாசனத்தில் ஏறியாக வேண்டும் என்றும் மணந்து கொண்டு இல்வாழ்க்கை இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள்.

சாதாரண சூழ்நிலையில் மைந்தன் ஒருவன் பெற்றோருடைய நலனுக்காக ஏதேனும் ஒரு பதவியை விட்டுக் கொடுக்கவும் திரும்பவும் அவர்களுடைய ஆணைப்படி அப்பதவியை ஏற்கவும் செய்யலாம். ஆனால் பீஷ்மருடைய நிலைமை முற்றிலும் வேறானது பெற்றோரின் நலனுக்காக அவர் தீவிரமான விரதம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த விரதம் உயிர் வாழ்ந்திருப்பதை விட மேலானது.

பீஷ்மர் சத்தியவதியை பார்த்து தாயே பெற்றோருக்காக வேண்டியே ராஜ பதவியையும் உலக இன்பதையும் துறந்தேன். பின்பு தாயின் ஆணைக்கு உட்பட்டு இந்த விரதத்தில் இருந்து விலகுவது நல்ல மகனுடைய செயலாக இருக்கலாம். ஆனால் என் விஷயம் அத்தகையது இல்லை இந்த விரதத்தில் இருந்து விலகுவது முறையாகாது. இந்த விரதத்திலிருந்து விலகுவதும் பொய்மையில் வாழ்வதும் ஒன்று தான். நான் சத்திய மார்க்கத்தை கடைப்பிடிக்கிறேன் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எந்த காரணத்தை முன்னிட்டும் நான் சத்திய மார்க்கத்தில் இருந்து விலக மாட்டேன். பஞ்சபூதங்கள் அவர்களின் செயல்களில் இருந்தும் ஒருவேளை விலகலாம். ஆனால் நான் சத்தியத்திலிருந்து விலகமாட்டேன் என்றார். மைந்தன் பூண்டிருந்த தீர்மானம் எவ்வளவு புனிதமானது என்பதை நெருக்கடியில் தவித்துக்கொண்டிருந்த தாய் சத்தியவதி அறிந்து கொண்டாள்.

குடும்பத்தின் பிரச்சினை சம்பந்தமாக தன்னை வாட்டிய துயரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று பீஷ்மரிடம் சத்தியவதி வேண்டினாள். இருவரும் அதில் ஆழ்ந்து தனது கருத்தைச் செலுத்தினர். அந்த நெருக்கடி சம்பந்தமாக பல பெரியோர்கள் சில நெறிகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு புலப்பட்டது. மகப்பேறு இல்லாத விதவை ஒருத்தி காலம் சென்ற தன் கணவனுக்கு வாரிசு வேண்டுமென்று உடல் உணர்வை தாண்டியுள்ள சான்றோன் ஒருவனுடன் சேர்ந்து மகப்பேறு பெறலாம் என்னும் நியதி உள்ளது. எனவே அந்த முடிவுக்கு இருவரும் வந்தனர்.