மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 8
சத்தியவதி இதுவரை ரகசியமாக வைத்திருந்த பழைய நிகழ்ச்சி ஒன்றை இப்போது துணிந்து பீஷ்மரிடம் தெரிவித்தாள். அவள் மங்கைப் பருவத்தில் இருந்த பொழுது யமுனா நதியைக் கடப்பதற்கு பராசர மகரிஷிக்காக படகை ஓட்டும் அவசியம் ஏற்பட்டது என்றும் அப்போது மேலோன் ஒருவன் பிறக்க ஏற்ற காலம் என்று மகரிஷி தெரிவித்தார். இதற்கு தானும் இணங்கியதால் பூலோகம் பெறுவதற்கரிய குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகரிஷி தன் தவ வலிமையால் என்னை மீண்டும் கன்னியாக்கி விட்டார். அக்குழந்தை அதிவிரைவில் வளர்ந்து ஒரு ரிஷி ஆனான். கிருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயருடன் காட்டிலேயே அக்குழந்தை வளர்ந்து. அவன் நான்கு வேதங்களையும் முறையாக வகுத்து வைத்தான். ஆகையால் வேதவியாசர் என்னும் பெயர் அவனுக்கு வந்தது. தன்னை அவன் பிரிந்து போன பொழுது வாக்கு ஒன்றை கொடுத்திருந்தான். கஷ்டமான நேரங்களில் நெருக்கடி வருகின்ற பொழுது தன்னை பற்றி நினைத்தால் தாயின் முன் தோன்றுவேன் என்று சொல்லிவிட்டு போனான். அந்த வியாசர் தன் வழியிலே விசித்திரவீரியனுக்கு மூத்தவன் ஆகின்றான். அந்த வியாசரை அழைக்க வேண்டும் என்று சத்தியவதி சொன்னாள். பீஷ்மர் அதற்கு முழு சம்மதம் கொடுத்தார். குடும்ப பிரச்சினை நீக்கி வைப்பதற்கு அந்த நேரத்தில் அதுவே தலை சிறந்த உபயாமாக இருந்தது.

வியாசர் காட்டில் வேத சாஸ்திரத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்தார். நிறை ஞானியான அவர் தன் தாய் தன்னை அழைக்கிறார் என்று அறிந்துகொண்டார். அக்கணமே யோக சித்தியால் தாயின் முன் பிரசன்னமானார். நெடுங்காலத்திற்கு பிறகு தாயும் சேயும் சந்தித்ததில் இருவருக்கிடையில் புளகாங்கிதம் உண்டாயிற்று. இந்த இன்ப நுகர்ச்சி அடங்கிய பொழுது தன்னை அழைத்ததன் காரணம் என்ன என்று மகன் தாயிடம் கேட்டார். தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை தாய் விரிவாக எடுத்து விளக்கினாள். விதவைகளான அம்பிகாவையும் அம்பாலிகாவையும் வயதில் இளையவர்கள். குடும்ப விருத்திக்காக மகப்பேறு அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆகையால் அவர்களுக்கு கர்ப்பதானம் செய்து வைக்கும் படி வியாசரிடம் தாய் வேண்டிக்கொண்டாள். இக்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியை வியாச ரிஷியும் நன்கு அறிந்து கொண்டார். தன் தாயின் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கவும் அவர் சம்மதித்தார்.

ஆனால் அதற்கிடையில் மற்றொன்றே அவர் எடுத்துரைத்தார். காட்டில் வளர்ந்து ஜடாமுடியுடன் இருக்கும் ரிஷியாகிய தாம் அதற்கேற்ற ராஜ உடலமைப்பை பெற ஒரு வருட காலம் தேவை என்று கூறினார். சத்தியவதி தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை எடுத்து விளக்கினாள். நாடு அரசன் இல்லாமல் நெடுநாள் வைத்து இருக்கலாகாது ஆகையால் உடனே தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கூறினாள். ஆகையால் வியாசரும் தன் தாயின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க சம்மதித்தார்.

சத்யவதி தன்னுடைய மருமகள்கள் இருவரிடம் தனித்தனியே அனைத்தையும் எடுத்துரைத்தாள். இருவரும் நாணத்துடன் அதற்கு சம்மதம் கொடுத்தார்கள். தன்னுடைய அறையில் முதல் மருமகள் அம்பிகா காத்திருந்தாள். அப்போது அவள் அறைக்கு ஜடாமுடியுடனும் தாறுமாறான தாடியுடனும் எதையும் துளைத்துக் கொண்டு போகும்படியான கூர்மையான கண்களுடனும் ஓர் உருவம் வந்தது. அத்தகைய உருவத்தைப் பார்த்ததும் ராஜகுமாரி மிக பயந்து போனாள். வியாசரிஷி தன்னை விட்டுப் பிரிந்து போகும் வரையில் அவள் தன்னுடைய கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளுடைய மடமையை முன்னிட்டு அவளுக்கு கண் தெரியாத மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லிவிட்டு வியாசர் சென்றார். வியாசர் சொன்னபடியே குரு வம்சத்திலே கண் தெரியாத திருதராஷ்டிரன் என்னும் மன்னன் பிறந்தான்.