மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 9
சத்யவதி கூறியபடி வியாசரை வரவேற்கும் முறை அடுத்தபடியாக அம்பாலிகாவுக்கு வந்தது. கரடுமுரடாக தென்பட்ட அந்த உருவத்தை பார்த்து அவள் முகம் வெளுத்துப் போய்விட்டது. அதன் விளைவாக அவளுக்கு பிறந்தவன் நிறத்தில் வெளுத்து இருந்தான். அவன் பாண்டு என அழைக்கப்பட்டான். முதல் மகன் கண் தெரியாதவனாக இருக்கும் படியால் அம்பிகாவுக்கு மற்றொரு மகப்பேறு தரும் படி வியாசரிடம் சத்தியவதி வேண்டிக் கொண்டாள். வியாசரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் அந்த ஏற்பாட்டுக்கு இணங்காத மருமகள் தனக்கு பதிலாக தன்னுடைய அழகிய பணிப்பெண் ஒருத்தியை அனுப்பி வைத்தாள். வியாசரிஷியின் தெய்வீக பாங்கை கருத்தில் கொண்டு அந்த பெண் பக்திபூர்வமாக அவரை வரவேற்றாள். மூன்றாம் மகனாகிய விதுரன் அவளால் பெற்று எடுக்கப்பட்டான். அவனிடத்தில் ஞானம் நிறைந்து இருந்தது. ஆனால் ராஜரீதி அவனிடம் அமையவில்லை.

வியாசர் தம் தாய் சத்தியவதியிடம் இத்தகைய செயலுக்காக தம்மை மீண்டும் அழைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். இதற்கு சத்தியவதியும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அமைந்த மூன்று குழந்தைகள் சிறுவர்களாக இருந்தார்கள். ஆகையால் பீஷ்மர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து அரசாங்க காரியங்களைக் கவனித்தார். மேலும் குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அவர் கருத்தைச் செலுத்தினார். கல்வி ஆட்சிமுறை போர்த்திறமை போருக்கு உரிய ஆயுதங்களை கையாளுதல் ஆகிய கலைகள் அனைத்தையும் பீஷ்மர் அவர்களுக்கு புகட்டி வந்தார். தர்மத்தின் பாங்குகள் அனைத்தும் அவர்களுக்கு புகட்டினார். நாடு முழுவதும் மன திருப்தி ஓங்கியிருந்தது.

காந்தார நாட்டு ராஜ குடும்பத்தில் இருந்து திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து வைக்க பீஷ்மர் விதுரருடன் ஆலோசனை செய்தார். கண் தெரியாமல் இருந்த ராஜகுமாரன் ஒருவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க அந்த நாட்டு அரசனாகிய சுபலன் முதலில் தயங்கினான். பின்பு ராஜரீதியையும் மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் செல்வியை அவ்வரசனுக்கு விவாகம் செய்து வைத்தான். தனக்கு அமைய இருக்கும் அரசன் பிறவியில் இருந்தே கண் தெரியாதவன் என்பதை அறிய வந்த ராஜகுமாரியான காந்தாரி தன் கண்களை தானே துணியால் கட்டிக்கொண்டு பார்வையற்றவளாக இருக்க தீர்மானித்தாள். தனக்கு அமையும் கணவருடைய பாணியிலேயே தானும் பார்வையற்று இருப்பதே சரியானது என அவள் தீர்மானம் செய்து கொண்டாள். சகுனி என்பவன் காந்தாரியின் சகோதரன் அவன் மிகவும் மகிழ்வுடன் தன் உடன் பிறந்தவளான காந்தாரியை குரு வம்சத்தின் தலைமை பட்டணமான அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.

திருதராஷ்டிரன் கண் தெரியாத காரணத்தினால் அரசனாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க தகுதியற்றவன் ஆனான். ஆகையால் பீஷ்மர் இரண்டாவது சகோதரனாகிய பாண்டுவை நாட்டிற்கு அரசனாக்கினான். மேலும் நாட்டை ஆண்டு வந்த பாண்டு அரசனுக்கு மணமுடித்து வைக்க பீஷ்மர் தீர்மானம் பண்ணினார். அப்போது நிகழ்ந்த சுயம்வரமொன்றில் குந்தி என்ற இளவரசி பாண்டு மன்னனே தன் கணவனாக மாலை சூட்டி ஏற்றுக்கொண்டாள். இந்த நிகழ்ச்சி பீஷ்மருக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. சில காலத்திற்கு பிறகு பாண்டுவிற்கு இரண்டாவது மனைவியாக மாத்ரி என்பவளை பீஷ்மர் திருமணம் செய்து வைத்தார். மத்திர நாட்டு மன்னனாகிய சல்லியனுக்கு அவள் தங்கையாவாள்.