மும்முர்த்திகளை வணங்கும்போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். மற்ற கடவுள்களுக்கு தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும்.

குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வங் களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.

நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.

சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், “குட்மார்னிங்’ சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.

ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.

பகவானை வணங்கும் போது குங்குமம் திருமண் காப்பு இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, துளசி மாலை அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். துளசி மாலை அணிந்தவர்களை மகாவிஷ்ணு தன்னுடைய பாதுகாப்பில் வைத்து பாதுகாத்து அருள்வதாக ஐதீகம். துளசி மாலையை தொடர்ந்து அணிபவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

துளசி மாலை அணிபவர்கள் அனைத்து விதமான பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளின் பிடியில் இருந்தும் விடுபடுவார்கள்.

கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா…?

* மூலவர் மற்றும் தாயார் போன்ற திருவுருவங்களுக்கு திருமஞ்சனம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* ஏகாதசி, துவாதசி, அமாவாசை, பெளர்ணமி ஆகிய தேதிகளில் துளசியைப் பறிப்பது மிகவும் அசுபமானது என கருதப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது . என்றும் சொல்லப்படுகிறது..

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

* கொடி மரம், கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

* வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைவதே சிறந்தது. நாம் அதனை அணைக்கக் கூடாது.

* திருக்கோவிலின் பிரதான வாசல் வழியில் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.