சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த சதுர்தசி விரதமாகும்.
பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் சம்பவிக்கும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும் நம் பூலோக இச்சைகளை முழுவதுமாக நிறைவேற்றி வைப்பதால் காம்யா விரதம் எனவும் அழைக்கப்படுகிறது.
அனந்த அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.
அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடன், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராக கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கும் கோலம் அதுவல்லவோ!
இந்நாளில் பரந்தாமனிடமிருந்து வெளிப்படும் சக்தி அலைகள் இவ்வுலகம் முழுவதும் பரவியிருக்குமாம். ஆகையால் அந்நாளில் விரதமிருந்து அனந்தனை வழிபட்டால் அந்தச் சூட்சுமச் சக்தி அலைகள் நம்மில் இரண்டறக் கலக்கும் என்பது நம்பிக்கை.
இந்த அனந்த விரத மகிமையைப் பற்றிய விவரங்களைப் பல புராணங்கள் எடுத்துரைக்கின்றன. என்றாலும் பகவான் கிருஷ்ணர் தனது வாயாலேயே அதுவும் தன்னைப் பற்றியே தருமனுக்குக் கூறும் உபதேசம் இவ்விரதத்தை எப்படிக் கடைபிடித்தால் பாண்டவர்கள், தாங்கள் இழந்த ராஜ்ஜியம் செல்வங்கள் அனைத்தையும் மீட்க முடியும் என்ற அறிவுரை சிறந்து விளங்குகிறது.
யுதிஷ்டிரா நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டு அதன்படி நடந்து கொள், எனது பிரிய யமுனா தேவிக்கும், ஆதிசேஷனுக்கும் இதில் முக்கியப் பங்குண்டு, எட்டு இதழ் தாமரைப் பூ கோலமிட்டு அதன் மேல் தலை வாழையிலையில் அரிசியைப் பரப்பி, விஷ்ணு மகாலட்சுமி என அலங்கரிக்கப்பட்ட இரண்டு கலசங்களில் யமுனா நதி தீர்த்தம் என்று பாவித்து நீரை நிரப்பி, தர்ப்பையினால் செய்த கூர்ச்சத்தை வைத்து அதன் மேல் ஆதிசேஷனின் பதுமையையோ அல்லது படத்தையோ இருத்திப் பூஜை செய்ய வேண்டும்.
அல்லது பதிநான்கு தர்ப்பங்களை இரண்டிரண்டாக எடுத்துக் கொண்டு நுனியில் முடிச்சுப் போட்டு அதை மூன்று கால்களாகப் பிரித்து ஜடை பின்னுவது போல் பின்னி, அதைத் தெற்குப் பக்கம் பார்க்கும் ஆதிசேஷனின் தலைப்பாகமாகப் பாவித்து, அனந்த பத்மநாப சுவாமி முன் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இப் பூஜையில் எல்லாமே 14 என்ற முறையில் இருத்தல் அவசியம் இவ்விரதம் இடைவெளி விடாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். பதினான்கு வகைப்பூக்கள், இலைகளால் அர்ச்சிக்க வேண்டும். அதிலும் தாழம்பூவால் பூஜிப்பது மிகவும் விசேஷம் மேலும் 14 வகைப் பழங்கள், பட்சணங்க ளை நிவேதனம் செய்ய வேண்டும்.
முக்கியமாகத் தோசை, எலுமிச்சை சாதம் கோதுமை மாவு, வெல்லம், கொண்டு செய்தஅதிரசம், படைப்பது மிகவும் இன்றியமையாதது. அதிரசத்தை 28 ஆகச் செய்து, நிவேதனம் ஆகிய பிறகு, அதில் பாதியை அந்தணர்களுக்குத் தானமளிக்க வேண்டும் இதில், மற்றொரு முக்கிய நிகழ்வு, பூஜையில் வைக்கப்பட்ட சிவப்பு நிற 14 இழைகளிலான 14 முடிச்சுக்கள் கொண்டதுமான கங்கணச் சரடைப் பெண்கள் இடதுகையிலும் ஆண்கள் வலது கரத்திலும் அணிய வேண்டும். மறு வருடம் இதைக் களைந்து விட்டுப் புதியதைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஈரேழு உலகங்களும் மகாவிஷ்ணுவிடம் உறைவதாகக் கருதப்படுவதால் இங்கு 14 என்ற எண்ணுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தர்மா, இவ்விரதத்துக்குப் பின்னணியாக விளங்கும் சரிதத்தை இப்போது கூறுகிறேன். கவனமுடன் கேள் என்று தொடர்ந்தார் கிருஷ்ணர்.
வசிஷ்டர் பரம்பரையில் உதித்த சுமந்தர் என்ற முனிவர், பிருகு முனிவரின் புத்திரி தீக்ஷாவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகும் புத்திசாலியுமான சுசீலா என்ற பெண் குழந்தை இருந்தாள். இளம் வயதிலேயே தாய்மரிக்க, சுமந்தர் கொடிய மனம் கொண்ட கர்கஷி என்பவளை மறுமணம் செய்து கொள்கிறார். பல கொடுமைகளுக்கு ஆளாகும். சுசீலாவை, கவுண்டின்ய ரிஷிக்கு மணம் முடித்து வைக்கிறார்.
கணவனுடன் புறப்படும் சுசீலாவுக்கு சீதனமாகக் கிடைப்பது சிறிதளவு சத்துமாவு மட்டுமே! மிக்க மனவேதனையுடன் பிரயாணம் செய்கையில் ஒரு நாள் ஆற்றங்கரையோரம் சுமங்கலிப் பெண்கள் தனித்தனியாகப் பூஜை செய்வதைப் பார்க்கிறாள். அன்று பாத்ரபத சுக்லபட்ச சதுர்தசி அனந்த விரதம் என்று, அவர்கள் அதன் மகிமையைத் தெரிவிக்க. சுசீலாவும் விரதத்தை அனுஷ்டிக்கிறாள். பலவித இன்னல்களுக்கிடையிலும் விரதத்தை விடாமல் கடைபிடிக்க, அவர்களின் வாழ்வில் வசந்தம் மலர ஆரம்பிக்கிறது. வளமான வாழ்வை அடைகிறார்கள்.
செல்வச் செழிப்பினால் உண்டான கர்வம், கவுண்டின் யரின் கண்களைத் திரையிட, இனி எதற்கு இந்த அசிங்கச் சரடைக் கட்டிக் கொண்டிருக்கிறாய். கழற்றி எறி என்று கோபத்துடன் இருவரின் சரடையும் அறுத்து நெருப்பில் போட்டு விட்டார். அநர்த்தம் நேரிடுமே என்று துடித்துப்போனவள் அனந்தா காத்தருள்வாய் என்றவாறே, தணலிலிருந்து சரடை எடுத்துப் பாலில் அமிழ்த்திச் சாந்தப்படுத்தினாள்.
அவள் நினைத்தபடியே ஆசிரமத்துப் பசுக்கள் நலிவடைந்தன. செல்வம் குன்ற ஆரம்பித்தது. பர்ணசாலை தீப்பிடித்தது. வறுமை எட்டிப் பார்க்க அப்போது தான் கவுண்டின்யருக்கு அனந்தனின் அருமை புரிய ஆரம்பித்தது அனந்தா அனந்தா என்று அரற்றியவாறு மாலவனைத் தேடி அலையலானார்.
அப்போது போகும் வழியில் அந்த இயற்கைக்கு மாறான ஐந்து காட்சிகளைக் கண்டு வியப்புற்று நின்றார். புல்வெளியில் மேயாமல் அதை வெறுப்பது போல் அங்கும் இங்கும் மிரண்டு ஓடிக் கொண்டிருந்தது. பசு மாடு ஒன்று கொத்துக் கொத்தாகப் பழுத்துக் குலுங்கும் மாமரத்தில் அவற்றைக் கொத்தித் தின்னப் பறவைகளைக் காணவே இல்லை. மேலும், ஒரு காளை மாடு, தரிசு நிலத்தை முட்டி மோதிக் கொண்டி ருந்தது. அருகருகே இரு தடாகங்கள் இருந்தாலும், ஒன்றில் நீர் நிறைந்து தளும்ப, மற்றொன்று வறண்டு காணப்பட்டது. ஒரு யானை தன் இயல்புக்கு முரணான செயல்களில் மும்மரம் காட்டியவாறு இருந்தது.
அவ்வாறிருந்தும் என் அனந்தனைப் பார்த்தீர்களா? என்று அவர் அவற்றிடம் ஆவலுடன் கேட்க, மவுனமே பதிலாகக் கிடைத்தது. தேடித் தேடி அலைந்த அந்நிலையில் அவர் முன் ஒரு அந்தணர் தோன்றி வா நான் உன்னை அனந்தனிடம் அழைத்துச் செல்கிறேன் என்றழைக்க அவருடன் ஒரு மாளிகையை அடைகிறார். உள்ளே சென்றதும், கூட வந்த வேதியர் மறைந்து விட, அங்கு கருடன் மீது எழுந்தருளிய நிலையில், சங்கு, சக்ரதாரியாய், பட்டுப் பீதாம்பரம் அணிந்தவராய், நாராயணன் காட்சி தர, கவுண்டின்யர் பரவச நிலையில் அனந்தா எனக் கதறியவாறு விழுந்து சேவித்தார். தான் செய்த தவறை மன்னித்தருளும்படி வேண்டினார். சரணாகதி அடைபவரை கை விட்டு விடுவாரா மதுசூதனன்?
முன்பிருந்த செல்வச் செழிப்பு, தர்மசிந்தனை மற்றும் வைகுண்ட ப்ராப்தி என்ற மூன்று வரங்களை அளித்தார். இருந்தாலும் மனதில் உறுத்திக் கொண்டிருந்த தான் வழியில் கண்ட அந்த ஐந்து வித்தியாசமான காட்சிகளைப் பற்றிக் கேட்க அதற்கு பதிலளித்தார் மாதவன்..
வாழ்வில் ஒருவர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது. என்பதை அவை எடுத்துக் காட்டுகின்றன. பசு, முற்பிறப்பில் செல்வச் செழிப்பில் திளைத்த பெண் ஆனால் யாருக்கும் அன்னதானம் செய்ய முன்வராத காரணத்தால், உண்ண வசதியிருந்தும் அதை அண்ட முடியாத நிலையை அடைந்தாள்.
மாமரம், முற்பிறவியில் ஒரு சிறந்த புலமை வாய்ந்த பிராமண வித்வானாக இருந்ததாகும்.... கர்வம் கொண்டதால், பிறருக்குக் கல்விக் கற்பிக்க விரும்பவில்லை. அதனால் பயனற்ற மாமரமாய் நிற்கிறார்.
செருக்குமிக்க அரசனாய் இருந்த அந்தக் காளை மாடு, எதுவும் விளையாத நிலங்களைத் தானமாக அளித்ததால் இப்போது இந்தப் பாடுபடுகிறது. தர்ம வழியில் செல்லவும். அதர்மத்தைக் கைவிடவும் அறிவுறுத்துகிறது. தடாகங்கள் கடைசியாக, தான் செய்த தர்மத்துக்கே, விலை நிர்ணயித்துப் பணம் ஈட்டியவனே அந்த யானை, இப்போது புரிகிறதா? என்றார்.விடை பெற்றுத் திரும்பிய கவுண்டின்யர், தன் பத்தினி சுசீலாவுடன் சேர்ந்து மறுபடியும் அனந்த விரதத்தைக் கடைப்பிடித்து, அனைத்துச் செல்வங்களையம் பெற்றுச் சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்... என்றுரைத்தார் கிருஷ்ணர்.
பிறர் துன்புறுவதைக் கண்டு மனம் பொறுக்காதவனும் ஏற்றத் தாழ்வுகளின்றி அனைவருக்கும் அடைக்கலம் கொடுப்பவனும் என்றும் பிரியாத ஶ்ரீ ஶ்ரீ தேவி, ஶ்ரீ பூதேவி பிராட்டியைத் தன்னகத்தே கொண்டவனும் பள்ளி கொண்டுள்ளவனுமாகிய அழகிய மணவாளனே அனந்த பத்மநாபா என் ஆத்மா என்றும் உனக்கு உடைமையாகவும் இனிமையாகவும் இருக்க அருள் புரிவாயாக! என்று அனந்தனைச் சேவித்துத் தண்டமிடுவோம்.
ஓம் நமோ நாராயணா !
ஸ்ரீ அனந்தபத்மநாபன் திருவடிகளில் சரணம் !