நண்பன் ஆசையாக கொடுத்த ஒருபிடி அவலுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள செல்வங்களை கொடுத்து பணக்காராக மாற்றியவர் கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் நண்பர் குசேலர், ஏழையாக மனைவி குழந்தைகளுடன் வசித்த அவரை செல்வந்தராக்கினார் பகவான். அதுவும் நண்பர் ஆசையாக கொடுத்த ஒருபிடி அவலை வாங்கி சாப்பிட்டு பொன்னும் மணியும் அவருக்கே தெரியாமல் பரிசளித்தார்.

கிருஷ்ணரும், குசேலர் என்கிற சுதாமாவும் ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருவின் மனைவி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார்.

அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது என்று கூறியதோடு குசேலா நீ வறுமையில் வாடுவாய் என்றார்.
குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே என்று வருந்தினார்.

உடனே குலேசரின் மனைவி சுசீலை ஒரு யோசனை சொன்னார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள் என்றாள். மனைவியின் யோசனையை ஏற்று கிருஷ்ணரை சந்திக்க புறப்பட்டார் குசேலர்.

அப்போது சுசீலை,பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள் என்று கொடுத்தாள். மனைவி கொடுத்த அவல் சிறிய மூட்டையுடன் நண்பனை பார்க்க அட்சய திருதியை நாளில் புறப்பட்டார் குசேலர்.

கிருஷ்ண பரமாத்மாவை பார்க்க குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.

“அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். அவர் சாப்பிட சாப்பிட குசேலர் வீட்டில் செல்வம் நிரம்பியது. கிருஷ்ணரின் மனைவி உடனே வந்து நீங்கள் சாப்பிட்டது போதும் எனக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என்று தடுத்தார்.

என்ன குசேலா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா என்று கூறி சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.

அன்போடும், நட்போடும் ஒருபிடி அவல் கொடுத்ததை ஏற்று நண்பனின் வாழ்க்கையையே மாற்றி விட்டார் பகவான் கிருஷ்ணன். எனவேதான் கிருஷ்ண ஜெயந்தி நாளில் எத்தனையோ பலகாரங்களை படைத்து வழிபட்டாலும் அவல் படைத்து வழிபடுகின்றனர்.