Sri Mahavishnu Info: ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 32 ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 32

ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 32

Sri Mahavishnu Info
ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 32
பிரம்மா தேவர்களிடம் பேச ஆரம்பித்தார். தேவர்களே நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். இதில் உங்களின் நன்மையும் அடங்கியுள்ளது. இந்த குழந்தை உலகில் பல நல்ல காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனால் என்னுடைய பிரம்ம தண்டத்தாலோ பிரம்மாஸ்திரத்தாலோ இவனுக்கு எந்த பாதிப்பும் வராது என்று வரம் தருகிறேன். உங்களால் முடிந்தவரை வரங்கள் தந்து இவனது சக்தியை பெருக்குங்கள் என்றார். உடனே இந்திரன் தன் கழுத்திலிருந்து மாலையை எடுத்து குழந்தை அனுமனுக்கு அணிவித்து இன்றிலிருந்து என்னுடைய வஜ்ராயுதம் முதல் எந்த ஆயுதத்தாலும் அடிபட்டாலும் இக்குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்ற வரத்தை தருகிறேன் என்றான். அடுத்து சூரிய பகவான் என்னுடைய தேஜசில் நூற்றில் ஒரு பங்கை இக்குழந்தைக்கு கொடுக்கிறேன். இதனால் இக்குழந்தை எல்லா சாஸ்திர ஞானமும் பெற்று நல்ல வாக்கு வன்மை உடையவனாக ஆவான். சாஸ்திர ஞானத்தில் இவனுக்கு இணையாக யாரும் ஆக மாட்டார்கள் என்று வரம் அளித்தார். அடுத்து வருணன் இக்குழந்தைக்கு மழையினால் வெள்ளத்தினால் எந்த பாதிப்பும் வராது என்ற வரத்தை அளித்தார். அடுத்து யமன் இக்குழந்தைக்கு என் பாசக் கயிறினாலோ தண்டத்தாலோ மரணம் வராது மரணம் இல்லாத ஆரோக்கியத்துடன் சிரஞ்சீவியாக வாழ்வான் என்ற வரத்தை அளித்தார். அடுத்து குபேரன் தன்னுடைய கதை ஆயுதத்தை கொடுத்து யுத்தம் என்று வந்தால் இக்குழந்தை எந்த சிரமமும் இல்லாமல் யுத்தம் செய்து வெற்றி பெறுவான் என்ற வரத்தை அளித்தான். அடுத்து விஸ்வகர்மா என்னால் உருக்கப்பட்ட எந்த அஸ்திரமும் இவனை எதுவும் செய்யாது என்ற வரத்தை அளித்தார்.

பிரம்மா வாயுதேவனைப் பார்த்து உன் மகன் அனுமன் தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிரியாகவும் நம்பியவர்களுக்கு அபயம் தருபவனாகவும் சிரஞ்சீவியாகவும் இருப்பான். யாராலும் வெற்றி பெற முடியாத அபரிமிதமான பலம் உடையவனாக இருப்பான் என்றார். விருப்பம் போல உருவம் எடுத்துக் கொள்ளவும் விரும்பிய இடம் செல்லவும் இவனால் முடியும். இவன் போகும் வழியை யாரும் தடை செய்ய முடியாது. அற்புதமான பல செயல்களை செய்து நல்ல கீர்த்தியை அடைவான். விஷ்ணுவின் அவதாரமான ராமனுக்கு உதவியாக பல காரியங்களை செய்து ராவணனை அழிக்க கருவியாக இருப்பான் என்றார். மகிழ்ச்சி அடைந்த வாயு அஞ்சனையிடம் விவரங்களைச் சொல்லி குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றான். குழந்தை சிறுவனானதும் குருகுல ஆசிரமத்து ரிஷிகளிடம் கல்வி கற்றான். மற்ற நேரங்களில் கைக்குக் கிடைத்ததை வீசி உடைத்து உருத் தெரியாமல் செய்து விளையாடுவான். அனுமனின் விளையாட்டு ரிஷிகள் செய்யும் யாகத்திற்கு இடையூராக இருந்தது. ஆனாலும் குழந்தையின் எதிர் காலத்தை அறிந்த ரிஷிகள் இதனை பொறுத்துக் கொண்டார்கள்.

அனுமன் தன் விளையாட்டில் எல்லை மீறவே கேஸரி என்ற ரிஷி அதட்டினார். அதையும் கேட்காத அனுமன் தன் விளையாட்டிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். இதனை கண்ட பிருகு என்ற ரிஷி தன் கோபத்தை வெளிக் காட்டாமல் எங்களது யாகத்திற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டி உன்னுடைய சக்திகள் உனக்கு தெரியாமல் மறந்து போகும். உலகிற்கு நன்மை செய்ய உனது சக்திகள் தேவைப்படும் காலத்தில் உனது சக்தியை யாராவது ஞாபகம் செய்தால் அப்போது உடனே தெரிந்து கொள்வாய் என்று சிறிய சாபத்தை கொடுத்தார். இதன் பின் அனுமன் சாதுவாக அடக்கம் மிகுந்தவராக இருந்தார். அச்சமயத்தில் குரு குலத்தில் சுக்ரிவனை தனது நண்பனாக அனுமன் பெற்றான். வானர அரசனாக இருந்த வாலி சுக்ரீவர்களின் தந்தையான ருக்ஷரஜஸ் சொர்க்க லோகம் சென்றார். அவரைத் தொடர்ந்து வாலி அரசனாகவும் சுக்ரீவன் யுவராஜனாகவும் பொறுப்பெற்றுக் கொண்டார்கள். அனுமானுக்கு சிறு வயதிலிருந்தே சுக்ரீவனுடன் பிரிக்க முடியாத நட்புடன் காற்றும் நெருப்பும் போல இருவரும் இணை பிரியாமல் இருந்தார்கள்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்